There is no risk from cell phone towers radiation செல்போன் கோபுரங்களால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: இந்திய மருத்துவக்கழக டாக்டர்கள் தகவல்

நாட்டின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய பங்குவகிப்பது செல்போன்கள். அத்தகைய செல்போன்கள் இயங்குவதற்கு அடிப்படையாக செயல்படுவது செல்போன் கோபுரங்கள். இந்த நிலையில் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் புற்றுநோய், தோல்நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றன.
இந்த கருத்தை இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் மறுத்தனர். இது தொடர்பாக, மருத்துவ கழக மும்பை மேற்கு தலைவர் டாக்டர் எஸ்.கே. ஜோஷி, செயலாளர் டாக்டர் பார்திவ் சங்வி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் தாக்கம் ஏற்படுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால் அதற்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லை. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி போன்றவை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை.
இவற்றுடன் தொடர்புபடுத்தும்போது, செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சுகளால் எந்த வித ஆபத்தும் இல்லை. செல்போன் கோபுரங்களின் இயக்கத்தை உலக சுகாதார அமைப்பும் கண்காணித்து வருகிறது. அவர்கள் சேகரித்த விவரங்களை சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் உள்ளிட்ட அமைப்புகளிடம் உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் தான் சேகரித்த விவரங்களை அறிக்கையாகவும் வெளியிடுகிறது.
செல்போன் கோபுரங்களை விட ரேடியோ, தொலைக்காட்சி ஆகியவற்றில் இருந்து நாம் 5 மடங்குக்கும் மேற்பட்ட கதிர்வீச்சுகளை சுவாசிக்கிறோம். சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்களை ஓசோன் மண்டலம் தடுக்கிறது. இந்தநிலையில் ஓசோன் மண்டலங்களால் தடுக்கப்படாத கதிர்வீச்சுகள் பூமியை நோக்கி வருகின்றன. அவை பொதுமக்கள் மீது படிவதால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நடுத்தர குடும்பங்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவன்கள், மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் எக்ஸ்-ரே கருவிகள், எம்.ஆர்.டி.ஐ. ஸ்கேன் கருவிகள் போன்றவையும் கதிர்வீச்சுகளை அதிக அளவில் உமிழ்கின்றன. மைக்ரோவேவ் ஓவன்களை பயன்படுத்தும் பெண்கள், செல்போன் கோபுர கதிர்வீச்சுகளை கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை. மேலும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை காட்டிலும் சூரியனில் இருந்து உமிழப்படும் கதிர்வீச்சுகள் ஆயிரம் மடங்கு உறுதியானவை.
எனவே உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளை, அரசாங்கம் பொதுமக்கள் மத்தியில் பரப்பி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவற்றை அந்ததந்த பிராந்திய மொழிகளில் பரப்புவது நல்லது. இதன் மூலம் செல்போன் கோபுரங்கள் குறித்து பொதுமக்களிடம் நிலவும் தவறான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.