ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்!
by admin
TamilSpyToday,
இருட்டுக்கே வாக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். ஆனால் பிரகாசமான திரைப்படங்களைப் படைப்பதில் அவர் வல்லவர். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தனிப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி நிகழ்கால மாற்றுசினிமா இயக்குனர்களின் பட்டியலில் மிஷ்கினுக்கு முக்கிய இடம் உண்டு.
இளையராஜாவின் இசை ராஜாங்கத்தோடு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உலவும் காட்டில் தன் திரைக்கதை மூலம் அதிரடி வேட்டை நடத்துகிறார் மிஷ்கின். வாரம் ஒரு காமெடிப் படம் என்று 'டிரெண்டு' பேசும் திரைக்கதைப் புலவர்களுக்கு, நம் வாழ்வின் பல விஷயங்களை மறந்துவிட்டோம் என்று சின்ன ஊசியால் குத்தி சுரணையூட்டுகிறார் படத்தின் இயக்குனர்.
முதல் ஷாட்டே அசரவைக்கிறது. குண்டடிப்பட்டு ரோட்டில் கிடக்கும் ஒரு கிரிமினல் குற்றவாளியை பல போராட்டங்களுக்குப் பிறகு அவன் யாரென்றே தெரியாத நிலையிலும், தன் வீட்டிற்கே கொண்டு வந்து மனிதாபிமான முறையில் அவனுக்கு சிகிச்சைக் கொடுத்து அவனைக் காப்பாற்றுகிறான் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன். காப்பாற்றப்பட்ட குற்றவாளியோ மறுநாள் காலை காணாமல்போகிறான்.
போலிஸ் மாணவனைக் கைது செய்து, அவன் குடும்பத்திற்கு பல டார்ச்சர்களைக் கொடுக்கிறது. ஒரு நாள் அந்த கிரிமினல் குற்றவாளி மாணவனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று மாணவனிடம் சொல்ல, உஷாரான போலிஸ், அந்த சந்திப்பின் போது மாணவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அந்த குற்றவாளியைக் கொலைசெய்யச் சொல்கிறது. மாணவனின் பின்னணியில் போலிஸ் இருக்கிறது என்று தெரிந்து சுதாரித்துக் கொள்ளும்குற்றவாளி, ஒரு சாகசத்தை நடத்தி, தப்பிப்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் மாணவனையும் அவனோடு கூட்டிச்சென்றுவிடுகிறான்.
ஓநாயிடம் ஆட்டுக்குட்டி சிக்கிக்கொள்ள, ஆட்டுக்குட்டியை வைத்து ஓநாயைப் பிடிக்க, புலிகளாக பிளான் போடும் போலிஸ் பூனைகளாக்கப்படுவதும், இதற்கு பின்னணியில் சில நரிகளான வில்லன்கள் ஓநாய்க்கு வலைவீசுவதும், யார் யாரை வேட்டையாடுகிறார் என்பதும் தான் மீதிக் கதை.
இவர்களின் ஓட்டம் முழுவது ஒரு பார்வை இழந்த குடும்பத்தைக் காப்பாற்றத்தான் என்று திரைக்கதை அமைத்திருப்பது இயக்குனரின் அபாரத்திறமையை வெளிச்சம் போடுக்காட்டுகிறது. இதில் ஓநாயாக இயக்குனர் மிஷ்கினும் ஆட்டுகுட்டியாக வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ-யும் சாபாஷ் போட வைக்கிறார்கள்.
ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தன் வீட்டில் வைத்து குண்டடிப்பட்ட ஒரு குற்றவாளியை மேஜர் ஆப்பரேஷன் மூலம் காப்பாற்றிவிட முடியுமா என்று கேள்வி எழுந்தாலும் அதை நம்புகிற வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர். என்ன நடக்கப்போகிறது என்று சிந்திப்பதற்குள்ளாகவே, மிஷ்கினை தன் தொளில் சாய்த்துக்கொண்டு பைக்கில் ஸ்ரீ வேகமாய் செல்லும்போது பளிச்சென விஸ்வரூபம் எடுக்கிறாரே இளையராஜா- அது இளையராஜாவின் இசை மாயாஜாலம்!
கட் இல்லாத மீக நீண்ட ஷாட்டுகள், அகண்டுவிரிந்த தெருக்களில் ஒரு ஓரமாய் வைக்கப்பட்ட கேமராவின் ஆங்கில்.கால்களை மட்டுமே காண்பித்து என்ன நடக்கிறது என்று நமக்கு புரியவைக்கும் காட்சிகள், அளவான வசனங்களாக இருந்தாலும் அந்த சீரியஸ் வசனங்களை வைத்தே சில இடங்களில் சிரிப்பை வரவழைப்பது என மிஷ்கினுக்கான அடையாளங்கள் எல்லாமே இப்படத்தில் அடக்கம்.
இந்த இடத்தில் பிளாஷ் பேக் வந்தே ஆகனும், ஆனா பிளாஷ் பேக் வந்தால் அது படத்தையே சிதைத்துவிடும் – அதை எப்படி செய்யப்போகிறார் என்று நாம் பலத் திரைக்கதை வடிவங்களை யோசித்துக்கொண்டிருக்க 'ஒரு நீண்ட ஷாட்டில் 'ஓநாய் – ஆட்டுக்குட்டி' கதையில் பிளாஷ் பேக் சொல்லி நெகிழவைத்து அசத்திவிட்டார் மிஷ்கின்.
தென்றலாய்… மழையாய்… புயலாய்… இடியாய்… மௌனமாய்… இசை ராஜாங்கம் நடத்தும் இளையராஜா படத்தின் முதுகெலும்பு. பாலாஜி வி ரங்கா மிஷ்கினின் கண்களை கடன் வாங்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டமால் டுமீல் என்று தீபாவளி பண்டிகைக் கொண்டாடுவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
காப்பாற்றிய மாணவனை எதற்காக கிரிமினல் குற்றவாளி தானாக சந்திக்க வரவேண்டும்? ஒரு வேளை அந்த மாணவனின் குடும்பத்தை போலிஸிடமிருந்து காப்பாற்றவா? என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்… க்ளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பார்வையிழந்த சிறுமியை அவன் தோளில் தூக்கி நடந்து செல்லும் காட்சி அதற்கான முழு விளக்கத்தையும் சொல்லிவிடுகிறது.
க்ளைமாக்ஸ் காட்சியின் சண்டையில், பார்வை இழந்த சிறுமியின் ஆடையில் இருக்கும் பெல்ட்டை பின்னால் வால் போல் கட்டிக்கொண்டு, அந்தச் சிறுமியை அதைப் பிடித்துக்கொள்ள சொல்வதும். அப்படியே சண்டை போடுவதும் திரையில் பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்கு பல கோடிகள் தேவையில்லை ஒரு சின்ன பெல்ட்டே போதும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். ஒரு ஓநாயப் போல தோற்றத்தில் தன்னை சித்தரிதுக்கொள்வதும் புதுமை!
எல்லா தயாரிப்பாளர்களும் ஒரு மஞ்ச சேலை டான்ஸ் கேக்குறாங்க என்று பல மேடைகளில் புலம்பி இருக்கிறார் மிஷ்கின். இதில் தானே தயாரிப்பாளர் என்பதால் பாடல்களே இல்லை என ஒரு நல்ல முடிவெடுத்திருப்பது படத்தின் பலம்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விறுவிறுப்பான வேட்டை! வித்தியாச அனுபவம்!
Show commentsOpen link
No comments:
Post a Comment