Img விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: நரேந்திர மோடி குற்றச்சாட்டு Modi says federal government has not taken any action to reduce the prices
ராஞ்சி, டிச.30-
4 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை சமீபத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் முதல்-மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் ஊழலை தடுக்கும் வகையில் லோக் அயுக்தாக்களை அமைக்க உத்தரவிட்டார். ஆதர்ஷ் ஊழல் தொடர்பான நீதி விசாரணை அறிக்கையை மராட்டிய மாநில அரசு நிராகரித்ததை குறை கூறினார்.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று கலந்துகொண்டு பேசினார். ராகுல் காந்தியின் குரல் அசரீரியாக வந்து கொண்டிருப்பதாக அவர் சாடினார். ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக தாக்கினார்.
அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:-
பழங்காலத்தில் தங்களைச் சுற்றிலும் நடப்பதை மக்கள் கண்டுகொள்ளாமல், இருந்தபோது அசரீரி குரல் கேட்டது. இப்போதும் அப்படி அசரீரி ஒலிக்கிறது. முதல்-மந்திரிகள் இதைச் செய்யுங்கள். முதல்-மந்திரிகள் அதைச் செய்யுங்கள் என்று அசரீரி வருகிறது. ஆனால் ஊழலில் தொடர்பு உடையவர்கள் இதைச் சொல்கிறார்கள். அசரீரி குரலை ஒலிக்கிறவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் எப்படி வளர்ந்தது என்பதை சொல்லட்டும்.
மத்தியில் பதவியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, நாட்டுக்கு சுமையாகி விட்டது. மக்களுடனான தொடர்பை அது இழந்து விட்டதால், நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி, அதன் அரசுகள், தலைவர்கள் மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பது கிடையாது. இன்று மக்கள் விரும்புவது வளர்ச்சியைத்தானே தவிர பிரிவினையை அல்ல. அவர்கள் நாடுவது வாய்ப்புகளைத்தான். வகுப்புவாத விஷத்தை அல்ல.
3 வருடங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வை தடுப்பது பற்றி பிரதமர் ஒரு கூட்டத்தை கூட்டினார். விலைவாசி உயர்வை தடுப்பது தொடர்பான சிபாரிசுகளை செய்யும் ஒரு குழுவுக்கு என்னை தலைவராக நியமித்தார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி முதல்-மந்திரிகள் 2 பேர் அதில் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் நடவடிக்கை எடுக்கத்தக்க விதத்தில் 62 அம்சங்களை தெரிவித்திருந்தோம். 20 சிபாரிசுகளை செய்திருந்தோம். நாங்கள் நல்லதொரு பணியாற்றியதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஆனால் இரண்டரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு முடங்கிப்போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ஒரு இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக மோடிக்கு எதிராக மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வந்த உடனேயே மோடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாநில அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தால், மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைப்பதில்லை. இதுதான் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிற நடைமுறை. அது இப்போது மீறப்பட்டுள்ளது என கூறினார்.
...
No comments:
Post a Comment