Thursday, August 1, 2013

தன்னையறிந்தால்

தன்னையறிந்தால் .
 
அது ஒரு ஏக்க காலம். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் விவசாயம் நலிவடைந்து மழைக்காக மக்கள் ஏங்கிய காலம். அன்று ஏதோ அதிசயத்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யப்போவதாக பாவலா காட்டிகொண்டிருந்த நேரம். மழை வருமா வராதா என்று வானத்தை அன்னாந்து  ஜாதகம் பார்த்து கொண்டிருந்தபோது எனது மகன் சிந்திக்கவேண்டிய ஒரு கேள்வியை கேட்டான்.
 
‘அப்பா சுதந்திரம் என்றால் என்ன? உரிமை என்றால் என்ன
 
நான் அவனை ஒரு நித்ய பார்வை பார்த்துவிட்டு ‘இப்ப ஏன் இந்த கேள்விஎன்றேன்.
 
‘எனக்கு தமிழ் அசைன்மெண்ட் கொடுத்திருக்காங்க. உங்களுக்கு தெரியுமா தெரியாதாஎன்றான்.
 
பொதுவாக நமது பிள்ளைகளை குழந்தைகளாக பார்த்து பழகிவிட்ட நமக்கு அவர்கள் ஏதவாது கொஞ்சம் பக்குவமாய் ஒரு கேள்வி கேட்டுவிட்டால் பதில் சொல்ல இறங்குவதா இல்லை அவர்கள் நம் அளவுக்கு ஏறி வந்து புரிந்து கொள்வார்களா என்பது சற்று குழப்பமாகவே இருக்கும். நண்பர்களிடம் போல் அவர்களிடம் பேசுவதற்கும் இனம் புரியாத ஒரு தயக்கம் குறுக்கே நிற்கும்.
 
எதுவாயினும் நம் மதிப்பு குறைந்துவிடகூடாது என்பதற்க்காக ‘சதந்திரம் என்றால் FREEDOM, உரிமை என்றால் RIGHTS. உனக்கு தான் ஆங்கிலத்தில் விடை தெரியுமே. கன்வர்ட் பன்னிக்கோ என்று கூறி நழுவ பார்த்தேன்.
 
இந்த நழுவல் எல்லாம் என்கிட்ட வேண்டாம். சரியா சொல்லுங்கப்பாஎன்று நன்றாக  எடைபோட்டுவிட்டான்.
 
‘நாம் செய்ய நினைப்பதை செய்வதற்கு நமக்கு உரிமை இருந்தா அது சுதந்திரம். நாம் செய்ய நினைப்பதை செய்வதற்கு சுதந்திரம் இருந்தா அது உரிமைஎன்று ஏதோ ஒரு மாமேதை பேசும் தோனியில் பிதற்றினேன்.
 
ஏதாவது புரியும் படி சொல்லுங்கப்பா. நான் வேறே இத இரண்டு பக்கத்துக்கு எழுதவேண்டும். இல்லாட்டி நீங்களே எழுதி கொடுத்திடுறீங்களாஎன்று அவன் பளுவை என்னிடம் ஏற்றபார்த்தான்.
 
நான் விடுவேனா ‘அதல்லாம் முடியாது. நான் சொல்றேன். அத வச்சு நீ எழுதிக்கஎன்று விட்டு தொடரலானேன்.
 
‘நம் நாடு ஆங்கில ஆட்சியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்து 65 வருசத்துக்கு மேல் ஆகுது. அதாவது நம்மை நாமே ஆட்சி செய்துகொள்ளும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டது. இந்திய குடியுரிமை உள்ள யாராவது தான் ஆட்சிக்கு வரமுடியும் என்பதும், அவர்களை ஓட்டுரிமை மூலமாக மக்கள் தேர்ந்தேடுக்கவேண்டும் என்பதும் சட்டமாகும். யாரை நீ தேர்ந்தேடுக்கலாம் என்கிற முழு சுதந்திரம் உனக்கு உண்டு. ஆனால் ஒரு ஓட்டு போட மட்டும் உனக்கு உரிமை உண்டு. அதுவும் உனக்கு 18 வயது பூர்த்தியானவுடன் தான் உனக்கு அந்த உரிமை கிடைக்கும்.
 
நீ விரும்பிய படிப்பை நீ படிக்கலாம். உன் விருப்பம் போல் கார் வாங்கி கொள்ளலாம். நீ செல்ல நினைக்கும் இடத்துக்கு நீ செல்லலாம். பிடிக்கும் வாகணத்தை நீ ஓட்டலாம். இதற்கு எல்லாம் உனக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் அவற்றை பெறுவதற்கான தகுதி வந்தவுடன் தான் அதன் உரிமை உனக்கு வழங்கப்படும் என்று எனக்கு தெரிந்தவரையில் குழுப்பினேன்.
 
‘போங்கப்பா ஒரே குழப்பமா இருக்கு. எனக்கு பிடிச்ச விளையாட்டை பிடிச்ச நேரத்தில் விளையாட எனக்கு சுதந்திரம் இருக்கா இல்லையா?என்று நான் குழுப்புவதை மடக்கி பிடித்துகொண்டான்.
 
உனக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் உன்னை கட்டுகோப்பாக வளர்ப்பதற்காக அதனை மறுக்கும் உரிமை எனக்கு உண்டு. உதாரணத்துக்கு என்னதான் நான் விரும்பிய படி செயல்பட எனக்கு சுதந்திரம் இருந்தாலும் அதன் உரிமை உங்கம்மாவிடம் இருக்கிறத போலஎன்று சமாளித்தேன்.
 
(இடையில் நீங்களும் மகனும் பேசும் போது என்னை ஏன் இழுக்கிறீங்க என்ற குரல் ஒன்று உள்ளிருந்து ஒலித்தது).
 
‘ரொம்ப குழப்பிறீங்கப்பா. உங்ககிட்ட கேட்டா எனக்கு தெரிஞ்சதும் மறந்திடும்என்று வருந்தும் தோனியில் பேசலானான். உடனே நான் சுதாரித்து கொண்டு ‘நீ செய்யும் காரியம் எதுவாயினும் அதன் சார்ந்த துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்பது உனது உரிமை. அதை சமயம் அத்துறையின் விதிமுறைகளுக்கு உட்படுத்தபடாத எவற்றையும் உன் விருப்பம் போல் செய்யலாம் என்பது உனது சதந்திரம். உதாரணத்துக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்களில் அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீ சுதந்திரமாக செயல்படுவது உனது உரிமை. அதே அரசாங்கத்தின் இடையூரில்லாமல் உனக்கு வழங்கப்பட்ட உரிமையை செயல்படுத்துவது உனது சுதந்திரம்என்றொரு விளக்கத்தை முன்வைத்தேன்.
 
நீங்க சொல்றது ஒன்னுமே எனக்கு புரியல. நீங்களே ஏதாவது எழுதி கொடுங்கப்பா. நான் படிச்சு புரிஞ்சுக்கிறேன்என்று என்னுடைய பிதற்றலை முடிவுக்கு கொண்டுவந்தான்.
 
நானும் உள்ளுக்குள் ‘உனக்கு மட்டுமா புரியல, எனக்குந்தான் புரியலஎன்று நினைத்து கொண்டு, அன்றும் ஏமாற்றி விட்டு கலைந்து போயிருந்த மேக்கூட்டத்தை வருத்தத்துடன் நோக்கலானேன்.
 
அன்றிரவு இச்சிந்தனையை மனதில் ஓடவிட்டவாறு தூக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தேன். மிக சாதாரணமாக தோன்றும் இக்கேள்வியில் எவ்வளவு பெரிய சச்சரவுகள் உள்ளடக்கியுள்ளது என்று வியந்தவாறு பல கோணங்களில் சிந்திக்கலானேன்.
 
மெல்ல மெல்ல எனது சிந்தனை இக்கேள்வியினை நமது தொழிலுடன் சம்பந்தபடுத்தி நகரதொடங்கியது. நமது தொழிலில் நமக்கு உள்ள சுதந்திரம்  என்ன? உரிமை என்ன?
 
தொடரும்....

No comments:

Post a Comment

Labels

Popular Posts